மக்களுக்கு வழங்கக்கூடிய சகல நலன்புரி வேலைத்திட்டங்களையும் அரசாங்கம் வழங்கியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாட்டின் சுகாதார சேவையானது சர்வதேச நன்மதிப்பை பெற்றுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு 350 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள், காலாவதியானமையினால் அழிக்கப்பட்டன. எனினும் தற்போதைய அரசாங்கம் மருந்து தொடர்பில் புதிய கணனி மென்பொருளொன்றை அறிமுகப்படுத்தி முகாமைத்துவம் செய்கிறது. இதன்மூலம் மருந்துகளை உரிய நேரத்தில் வழங்க முடிந்துள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். சிறந்த முகாமைத்துவத்துடனான மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
வருடமொன்றிற்கு சுமார் 12 இலட்சம் பேர் பார்வை இழக்கின்றனர். தமக்கு தேவையான கண்வில்லைகளை பெற்றுக்கொள்ள போதியபொருளாதார வசதியின்மையே இதற்கு காரணமாகும். இதனால் அரசாங்கம் கண்வில்லைகளை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து இலவசமாக வழங்குகின்றது. இருதய நோயாளர்களுக்கான ஸ்டன்ற் எனப்படும் நரம்பினூடாக செலுத்தும் உருளையை அரசாங்கம் இலவசமாக வழங்குகின்றது. இதன் மூலம் இருதய நோயினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை பெருமளவில் குறைவடைந்துள்ளது. 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்டன்ற் இலவசமாக வழங்கப்படுவதைப்பற்றி எவரும் கதைத்ததில்லை. தேங்காய் விலை அதிகரித்தால் அதையே ஊடகங்கள் பெரிதுப்படுத்திக்காட்டுகின்றன. புற்றுநோயாளர்களுக்கு 200 முதல் 300 இலட்சம் ரூபா வரை செலவிடப்படுகிறது. இலங்கையின் மருத்துவ துறையில் பாரிய புரட்சி ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் புகழ்ந்துள்ளன. 1990 என்ற இலவச எம்பியுலன்ஸ் சேவையையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.