வறுமையை இல்லாதொழிப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின்; எண்ணக்கருவிற்கமைய செயற்படுத்தப்படும் ‘கிராமத்தைக் கட்டியெழுப்பும் பயணம்’ செயற்திட்டத்தினூடாக கிராமிய மக்களின் அபிவிருத்தி பிரச்சினைகளுக்கு துரித தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதுடன், மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளும் உள்ளடக்கப்படும் வகையில் மக்கள் பிரதிநிதிகள் ஓர் இடத்திற்கு அழைக்கப்பட்டு அவர்களது அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, புத்தளம் மாவட்டத்தை மையப்படுத்தி இடம்பெற்ற நிகழ்வின் போது முன்வைக்கப்பட்ட குடிநீர் பிரச்சினைக்கு துரித தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் சிறுநீரக நோய் நிவாரண தேசிய செயற்திட்டத்தின் நெறிப்படுத்தலில் புத்தளம் நவகத்தேகம, ஆனமடுவ மற்றும் தங்கொடுவ பிரதேச செயலாளர் பிரிவுகளில் நீர் சுத்திகரிப்பு தொகுதிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. குறித்த நீர் சுத்திகரிப்பு தொகுதிகளை ஜனாதிபதி தொலைதூர தொழிநுட்ப முறையினால் ஜனாதிபதி செயலகத்திலிருந்து நேற்று பிற்பகல் திறந்து வைத்தார்.