இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக அக்குரனை பிரதேச செயலாளருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 5 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி கருங்கல் வர்த்தகரொருவருக்கு வெடிப்பொருட்களுக்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க குறித்த பிரதேச செயலாளர் 50 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு பதிவு செய்திருந்தது. நீண்டகாலமாக இடம்பெற்றுவந்த விசாரணைகளின் பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று தீர்ப்பளித்தார். 5 வருட சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதோடு, இலஞ்சமாக பெற்றுக்கொண்ட 50 ஆயிரம் ரூபாவையும் மீள வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.