மத்திய மலைநாடு முழுவதும் கடந்த சில தினங்காளாக நீடித்து வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக பல இடங்களில் கடுமையான பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் வாகன போக்குவரத்துக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை முதல் ஹட்டன் – நுவரெலிய பிரதான வீதி, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி, ஹட்டன் – மஸ்கெலியா, பொகவந்தலாவ வீதிகளிலும் கினிகத்தேனை – நோட்டன் ப்ரிட்ஜ் வீதியிலும் அதிக பனிமூட்டம் நிலவுகிறது. ஹட்டன் நகரிலும் இன்று காலை கடும் பனிமூட்டத்தை காணக்கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். முன்னால் வருகின்ற வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுவதால், சாரதிகள் வாகனத்தின் முன்பக்க விளக்குகளை ஒளிரவிட்ட வண்ணம் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை இப்பனிமூட்டத்துடனான காலநிலையின்போது மலையகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடும் காற்றுடனான மழை பெய்துவருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
நாட்டிலும், நாட்டை சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. நாடு முழுவதும் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 55 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் கடும் காற்று வீசுமென கடமையிலிருந்த வானிலையாளர் .. .. தெரிவித்தார்.