நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 8ம் திகதி அறிவிக்கப்படவுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணரத்ன ஆகியோர் இத்தீர்ப்பை அறிவிக்கவுள்ளனர். ஊடகவியலாளர் பிரகீத் எக்லெனிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு கடந்த 2016ம் ஆண்டு ஹோமாகம நீதவான் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டது. இதன்போது ஞானசார தேரர் நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் ஹோமாகம நீதிவானாக இருந்த ரங்க திஸாநாயக்கவால் இதுதொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதனடிப்படையிலேயே இவ்வழக்கு விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில் தீர்ப்பை எதிர்வரும் 8ம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதனிடையே இதே வழக்கு விசாரணையின் போது சந்த்யா எக்லெனிகொடவை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவருக்கு 6 மாத கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து அண்மையில் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.