தாய்லாந்து பிரதமர் ஜெனரல் ப்ரயுத் ச்சான் ஓச்சா இன்று இலங்கைக்கு வருகைதரவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் இன்று அவர் நாட்டுக்கு வருகைதரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளை பரிமாற்றுதல் மற்றும் குற்றவியல் தண்டனைகளை நடைமுறைப்படுத்தல் மீதான சாசனம், மூலோபாய பொருளாதார பங்காண்மை தொடர்பான புரிதல் உடன்படிக்கை ஆகியன அவரின் விஜயத்தின் போது இரு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்படவுள்ளன.
மேலும் ஆரம்பநிலை உற்பத்திகளில் பெறுமதி உட்சேர்ப்புடன் தொடர்புடைய தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் குறித்தான உடன்படிக்கை, இலங்கையின் தன்னிறைவு பொருளாதார தத்துவத்தை அடிப்படையாக கொண்ட பேண்தகு சமூக அபிவிருத்தி மாதிரியின் மீதான ஒத்துழைப்புக்கான இணைந்த நடவடிக்கை நிகழ்ச்சித்திட்டம் ஆகியவை தொடர்பிலும் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.