அறிவுடன் கூடிய ஏற்றுமதி பொருளாதாரத்தின் மூலம் நாடு அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மொனராகலையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மொனராகலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. மொனராகலை பழைய பஸ் நிலையத்தின் அருகில் நிர்மாணிக்கப்படவுள்ள உத்தேச கடைத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. இத்திட்டத்திற்காக 58.8 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.
மொனராகலை மகாநாம தேசிய பாடசாலையின் புதிய கட்டமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. பிரதமருக்கு இப்பாடசாலை மாணவர்கள் மிகவும் சிறப்பாக வரவேற்பை வழங்கினர். இப்பாடசாலையின் இரண்டு மாடி அழகியற்கலை பிரிவினை அங்குரார்ப்பணம் செய்து வைத்த பிரதமர் மாணவர்களுடன் இன்முகத்துடன் உரையாடினார். இங்கு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவினை அடிப்படையாக கொண்டு ஏற்றுமதி பொருளாதாரம் பாடசாலைகளில் இருந்து ஆரம்பிக்கப்படவேண்டுமென தெரிவித்தார்.
பிரதமர் இங்கு உரையாற்றுகையில் :
“கிட்டிய பாடசாலை சிறந்த பாடசாலை திட்டம், 13 வருட கட்டாய கல்வி, ஆசிரியர் பயிற்சி, என்பன இன்று மிகவும் இன்றியமையாததாகும். கல்வி துறையில் தற்போது பெரும் போட்டி நிலவுகின்றது. இலங்கை போன்ற மனிதவளம் கொண்ட நாடு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். ஏற்றுமதி பொருளாதார முறை உருவாக்கப்பட்டால் மட்டுமே எமக்கு வளமான எதிர்காலம் உண்டு. தற்போது எமது நாடும் பெரும் கடன் பொறியில் சிக்கியுள்ளது. அதற்கு நாம் தீர்வு காண வேண்டும். நாங்கள் தற்போது பெரும் கஷ்டத்தின் மத்தியில் கடனை செலுத்தி வருகிறோம். நாங்கள் வட் வரியை அதிகரிக்க வேண்டியேற்பட்டது. ஒருசில பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன. எந்தவொரு அரசாங்கமும் விமர்சனங்களை விரும்புவது இல்லை. உலகத்தில் அமுலில் உள்ள பொருளாதார அபிவிருத்தியை அடிப்படையாக வைத்து நாம் முன்னேற வேண்டும். இதற்காக நாம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக அவதானம் செலுத்த வேண்டும். எமது மனிதவளத்தை பயன்படுத்த கூடிய துறைகளை நாம் இனங்காண வேண்டும். நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட தொழிற்சாலைகள் மற்றும் சேவைகள் தற்போது முன்னெடுப்படுகின்றன. இவற்றை பாடசாலைகளில் இருந்து நாம் ஆரம்பிக்க வேண்டும். எனவே பாடசாலைகளை இப்போது உள்ளதை விட மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டும். அதற்கு தேவையான அறிவை நாம் பெற்று கொடுக்க வேண்டும்.” என தெரிவித்தார்