பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்து நிறைந்த பட்டியலில் இந்தியா முதலிடத்திலிருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. உலக அளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் அடிமைகளாக உழைப்பை பெறும் நிலை அதிகரித்து காணப்படுவதாகவும் மேற்கொள்ளப்பட்ட புதிய கணிப்பீட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ரொய்டஸ் நிறுவனம் மேற்கொண்ட புதிய கணிப்பீட்டின் மூலமே இத்தகவல்கள் தெரிய வந்தது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் சிறியா ஆகியன 2 ஆம் 3 ஆம் இடங்களில் காணப்படுகின்றது. மேற்குலக நாடுகளில் அமெரிக்காவும் இவ்வறிக்கையில் 10 ஆம் இடத்தில் உள்ளது. பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து 550 வல்லுனர்கள் ஈடுபடுத்தப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வீட்டு வேலை, ஆள்கடத்தல், பலவந்தமாக திருமணங்களை செய்து வைத்தல், சிறுவர் திருமணங்கள், பாலியல் கொடுமைகள் உள்ளிட்ட பல காரணங்கள் காரணமாக இந்தியா பெண்களுக்கு வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான நாடாக காணப்படுவதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அத்துடன் பெண்களுக்கு அச்சுறுத்தல்களை விடுக்கும் கலாசார சம்பிரதாயங்கள் கொண்ட ஆபத்தான நாடாகவும் இந்தியா காணப்படுகின்றது. இற்றைக்கு 7 வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, இந்தியா 4 ஆம் இடத்தில் காணப்பட்டது. கடந்த காலங்களில் இந்தியாவில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.