பராக்கிரம சமுத்திரத்தை அண்டிய பகுதியில் காணப்படும் குப்பைகூழங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் அருகில் இன்று காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அப்பகுதியில் முறையற்ற விதத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதை ஜனாதிபதி அவதானித்தார். உடனடியாக அதிகாரிகளை வரவழைத்த ஜனாதிபதி குப்பைகளைஅகற்றுவதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினார். குப்பைகளை கொட்டுவதற்குரிய தொட்டிகளை வைக்குமாறும் முறையற்ற விதத்தில் குப்பைகளை கொட்டுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அத்துடன் தொடர்ந்து இவ்விடயத்தை கண்காணிக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். வரலாற்று புகழ்வாய்ந்த பராக்கிரம சமுத்திரத்தின் புகழை பாதுகாப்பதற்கும் மக்கள் சுதந்திரமாக நடமாடவும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கான சுற்றாடலை ஏற்படுத்துவதற்கும் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி தெரிவித்தார். பொசன் நோண்மதி தினத்தை முன்னிட்டு நாட்டின் நாலா பாகங்களிலிருந்தும் பொலன்னறுவைக்கு வருகை தரும் இலட்ச கணக்கான யாத்திரிகர்களின் நலன்கருதி சுற்றாடலை உரிய முறையில் பேணுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வாரத்திற்கு 2 முறையாவது நீங்கள் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். உங்கள் பகுதியில் என்ன நடக்கின்றதென நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தால் ஒன்றுமே நடக்காது. பராக்கிரம சமுத்திரத்தின் அருகில் பல மாதமாக பொலித்தீன்கள் குவிந்து கிடக்கின்றன. அது இன்று நேற்று போடப்பட்டதல்ல. தேவையான ஊழியர்கள் இருக்கின்றார்கள் அல்லவா? கண்ணில்தெரிந்தவற்றைதான் நீங்கள் துப்பரவாகுகின்றீர்கள். ஆனால் பொது மக்களின் கண்ணுக்கு இலகுவில் புலப்படாத குப்பை கூழங்களை தான் விரைவில் அகற்ற வேண்டும். முற்றத்தை தூய்மையாக வைத்து விட்டு சமையலறையை அழுக்காக வைத்திருப்பதற்கு இது சமமாகும். பொசன் நோண்மதி தினத்திற்காக வருகை தரும் மக்களின் நலன் கருதி இங்கிருக்கும் குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.