காலி நகரின் சில வீதிகளில் ஒருவழி போக்குவரத்து முறை அமுல்படுத்தப்பட்டமையை எதிர்த்து அப்பகுதி வர்த்தகர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலி நகர மேயரின் ஆலோசனைக்கு அமைய அமுல்படுத்தப்படும் இந்த போக்குவரத்து திட்டத்தினால் தாங்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக காலி நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது வர்த்தகர்கள் தெரிவித்தனர். இத்திட்டத்தினை உடனடியாக மாற்றி வழமைப்போல் போக்குவரத்து இடம்பெற வாய்ப்பளிக்கப்படவேண்டுமெனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். புதிய போக்குவரத்து நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டமையினால் காலி நகரில் பல்வேறு வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டு தொடர்பில் காலி நகர மேயர் பிரியந்த சகபந்துவை நாங்கள் தொடர்பு கொண்ட போது அவர் அதற்கு இவ்வாறு பதிலளித்தார்.
“இந்த ஒருவழிபாதை திட்டம் ஏற்கனவே அமுலில் இருந்த ஒரு திட்டமாகும். ஏதோவொரு காரணத்தினால் அது நிறுத்தப்பட்டது. முன்னர் இருந்த திட்டத்தையே நாங்கள் தற்போது அமுல்படுத்தியுள்ளோம். ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் மக்கள் ஈடுபடவில்லை. வர்த்தகர்களே ஈடுபட்டுள்ளனர். அவர்களது வர்த்தகம் பாதிக்கப்படும் என்பதால் தான் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் சௌகரியமாக பயணம் செய்ய வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதில் எவ்வித தவறும் இல்லை. பெரும்பான்மையான மக்கள் இதனை வரவேற்றுள்ளனர்.”