கிரி வெஹர ரஜமஹா விஹாராதிபதி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விஹாராதிபதி மேலதிக சிகிக்சைகளுக்காக விமானம் மூலம் கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டார்.
றுஹூணு மாகம்பத்துவே பிரதம சங்க நாயக்கரும், கிரிவெஹர ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதியுமான சங்கைக்குரிய கொபவக்க தமிந்த தேரர் மற்றும் மற்றொரு தேரர் மீது நேற்றிரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதில் காயமடைந்த பிக்குகள் இருவரும் சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இங்கு பிரதம தேரர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக, வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். இவரது வயிற்றின் கீழும், வலது கையிலும், வலது காலிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர், விமானப்படையின் ஹெலிகொப்டர் மூலம் கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டார். இவர் இப்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத நிர்மாணங்களுக்கு எதிராக கடுமையாக குரல்கொடுத்து வந்தவர் எனவும், இவ்விஹாரையின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் சேவைகளுக்காக, பல்வேறு நபர்களின் ஆத்திரத்தை தேடிக்கொண்டவர் எனவும், தெரியவந்துள்ளது.
இதேவேளை, துப்பாக்கி பிரயோகம் மேற்கொணட சந்தேக நபர்களின் வீட்டை சோதனையிட்டபோது, வாள் ஒன்றும், கத்தியொன்றும், 10 துப்பாக்கி ரவைகளும் பயன்படுத்தப்பட்ட மூன்று தோட்டக்களும், சந்தேக நபர் ஒருவரின் புகைப்படம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதுடன், இச்சந்தேக நபர்களால் பயன்படுத்தப்பட்ட சிஏஜீ 8531 இலக்கம் கொண்ட வெசல் ரக வாகனமொன்றும் பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர் இப்பகுதுpயை விட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும், தெரியவந்துள்ளது.