தென்கொரியாவுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் யுத்த பயிற்சியை நிறுத்தவுள்ளதாக அமெரிக்கா மீண்டும் உறுதிசெய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜோன் உன்னுக்கிடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணப்பாட்டுக்கமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கிடையில் இடம்பெறும் யுத்த பயிற்சிக்கு கடந்த காலங்களில் வடகொரியா பாரிய எதிர்ப்புக்களை வெளியிட்டு வந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் இருநாட்டு தலைவர்களுக்கிடையில் இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையின்போது பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன. ஏவுகணை வேலைத்திட்டத்தை நிறுத்துவதற்கு வடகொரியா இணக்கம் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் பாதுகாப்புக்கென சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேலும் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளுமாறு வட கொரிய தலைவருக்கு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். வடகொரிய தலைவரும், அமெரிக்க ஜனாதிபதியை தனது நாட்டுக்கு வருகைத்தருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வலய மற்றும் சர்வதேச சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மையுடைய பாதுகாப்பை ஏற்படுத்துவதே இதன் முதற்கட்ட எதிர்ப்பார்ப்பாகும். இதேவேளை தென்கொரிய ஜனாதிபதி மூன்ஜேயின், அமெரிக்க ஜனாதிபதியுடன் தொலைபேசி உரையாடலொன்றையும் முன்னெடுத்துள்ளார். யுத்த பயிற்சி தொடர்பில் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.