அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் ஆகியோர் கைகுலுக்கிக்கொண்டுள்ளனர். இருவருக்குமிடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இராஜதந்திர சந்திப்பு இன்று சிங்கப்பூரில் இடம்பெற்றது. அந்நாட்டு நேரப்படி காலை 9 மணிக்கு சந்திப்பு ஆரம்பமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உலகளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கான ஊடகங்கள் குறித்த நிகழ்வை அறிக்கையிடுவதற்காக சிங்கப்பூரிற்கு பயணித்துள்ளன. இந்நிலையில் சர்வதேச ஊடகங்களுக்கு முன்னிலையில் இரு நாட்டு தலைவர்களும் கைகுலுக்கிக்கொண்டனர். கொரிய தீபகற்பம் குறித்து அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்குமிடையில் காணப்படும் நீண்டகால அரசியல் முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. சிங்கப்பூரின் சென்டோஸா தீவிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்தனர். வடகொரியாவின் அணுசக்தி வேலைத்திட்டங்களை கைவிடுவது மற்றும் ஏவுகணை பரிசோதனைகளை நிறுத்துவது குறித்து டொனால்ட் ட்;ரம்ப் மற்றும் கிம் ஜொங் உன்னிற்கிடையில் கலந்துரையாடல்கள் தொடர்வதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.