போலி வர்த்தகர்களிடம் அகப்படாது நெற் கொள்வனவு மத்திய நிலையத்தில் மாத்திரம் நெல்லை வழங்குமாறு நெற் சந்தைப்படுத்தல் சபை விவசாயிகளுக்கு அறிவித்துள்ளது. நெற்கொள்வனவிற்கு தேவையான சகல வசதிகளையும் களஞ்சியசாலைகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு சாதாரண விலையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெற்சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கஷ்தூரி அனுராத நாயக்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவை மாவட்டத்தில் மாத்திரம் 27 களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. ஏனைய மாவட்டங்களிலும் அறுவடைக்கு முன்னரே களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அதற்கமைய விவசாயிகள் தங்களது நெல் மாதிரிகளை காண்பித்து நெல்விநியோக செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு நெற்சந்தைப்படுத்தல் சபை குறிப்பிட்டுள்ளது. 2 ஆயிரம் கிலோ கிராம் விவசாயி ஒருவரிடமிருந்து கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நெற்கொள்வனவிற்கென களஞ்சியசாலைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. நெற்கொள்வனவிற்கு தேவையான நிதி மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக நெற்சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கஷ்தூரி அனுராத நாயக்க தெரிவித்தார்.