ப்ரோட்லெண்ட் திட்டம் காரணமாக இருப்பிடங்களை இழந்தவர்களுக்கு நஷ்டயீடு வழங்கப்படுமென அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இம்மின்னுற்பத்தி நிலையத்தினால் எதிர்பார்க்கப்படுகின்ற கொள்ளளவு தேசிய தொகுதிக்கு இணைத்துக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து அவசர மின் கொள்வனவுகளை மேற்கொள்ள தேவையில்லையென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ப்ரோட்லேண்ட் திட்டத்தின் நிர்மாண பணிகள் காரணமாக இருப்பிடங்களை இழத்தல், மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்ற மக்கள் குறித்து கண்டறிவதற்காக அமைச்சர் ரவி கருணாநாயக்க அப்பகுதிகளுக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்;கொண்டார். இத்திட்டத்தின மூலம் மின்சார தொகுதிக்கு 35 மெகாவோட்ஸ் மின்சாரத்தை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதுவருட பிறப்பிற்கு முன்னர் கட்டாயமாக இதற்கான நஷ்டயீடு வழங்கப்படும் என்பதாக நான் முதலில் உறுதியளிக்கின்றேன். மின்சார சபையின் அனுசரணையுடன் 3 கிலோமீற்றர் நீளமான பாதையை அமைக்கவுள்ளோம். எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் இதனை திறந்து வைக்கவும் திட்டமிட்டுள்ளோம். இந்த 35 மெகாவோட்ஸ் மின்சாரமும் தேசிய தொகுதிக்கு இணைக்கப்படுமாயின் அவசர கொள்வனவுகள் தேவைப்படாது. ஊழல் மோசடிகளை இல்லாதொழித்து பொதுமக்களுக்கு அதற்குரிய பிரதிலாபங்களை வழங்குவதே எமது எதிர்பார்ப்பாகும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.