பாகிஸ்தானுடன் 20 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீட்டு ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா கைச்சாத்திட்டுள்ளது. சரிவடைந்துள்ள பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்பும் நிலையில் சவுதியுடன் குறித்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆசிய நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பித்துள்ள சவுதியின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையிலான சந்திப்பின்போதே முதலீட்டு ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இந்நிலையில் முதலீட்டு ஒப்பந்தத்திற்கு அமைய பாகிஸ்தானிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் மறுசீரமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் நாட்டின் எரிசக்தி வளத்தை அதிகரிக்க முடியுமென பாகிஸ்தான் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை சவுதியின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் பாகிஸ்தானுக்கான விஜயத்தையடுத்து இந்தியா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.