இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கட்டினால் பரபரப்பான வெற்றியை பெற்றது.
டேர்பன் மைதானத்தில் கட்நத 13ம் திகதி ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி முதலில் தென்னாபிரிக்க அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. அதன் அடிப்படையில் தனது முதலாவது இன்னிங்சில் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களை பெற்று கொண்டது. இதில் குயின்டன் டி கொக் 80 ஓட்டங்களை அதிகபட்சமாக அணிக்கு பெற்று கொடுத்தார். இலங்கை அணி சார்பில் விஷ்வ பெர்ணான்டோ நான்கு விக்கட்டுக்களை கைப்பற்றினார். இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை பெற்று கொண்டது. குஷல் பெரேரா 51 ஓட்டங்களை அணிக்காக பெற்று கொடுத்தார். தென்னாபிரிக்க அணி சார்பில் ஸ்டெயின் 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
தனது இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 259 ஓட்டங்களை பெற்று கொண்டது. இதில் டுபிளஸிஸ் 90 ஓட்டங்களை அதிகபட்சமாக அணிக்காக பெற்று கொண்டார். இலங்கை அணி சார்பில் அம்புல்தெனிய 5 விக்கட்டுக்களையும், விஷ்வ பெர்ணான்டோ நான்கு விக்கட்டுக்களையும் கைப்பற்றினர். 304 எனும் வெற்றியிலக்கோடு களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை எதிர்கொண்டு வந்தது. இலங்கை அணி 226 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை 9வது விக்கட்டையும் இழந்தது. ஒரு விக்கட் மாத்திரம் கையிருப்பில் இருக்க குஷல் பெரேரா தன்னுடைய நிதானம் மற்றும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 12 பவுண்டரிகள் 5 சிக்சர்களை விளாசி 153 ஓட்டங்களை பெற்று கொடுத்து அணியின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பை வழங்கினார். இது இவரது இரண்டாவது டெஸ்ட் சதமாகும். இவரே இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார். பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக கேஷவ் 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார். அதன் படி இலங்கை அணி 9 விக்கட்டுக்களை இழந்து 304 ஓட்டங்களை பெற்று போட்டியை விறுவிறுப்பாக்கி வெற்றி பெற்றது. இதன் படி இலங்கை அணி 1-0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.
அண்மை காலமாக இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் பிரகாசிக்க தவறிய இலங்கை புதிய தலைமைத்துவமான திமுத் கருணாரட்ன தலைமையில் இப்போட்டியை பல சவால்களுக்கு மத்தியில் தன்வசமாக்கியமை குறிப்பிடத்தக்கது.