65 வயதுக்கு குறைந்த ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மூலம் ஆசிரிய வெற்றிடங்கள் நிரப்பப்படுமென அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
குருநாகல் பனாதரகம ஆரம்ப பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தினை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்விலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். நவீன வசதிகளை கொண்டதாக இந்த கட்டடம் 150 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் தட்டுப்பாடு நிலவும் பாடசாலைகளை கண்டறிந்து அவற்றில் 65 வயதுக்கும் குறைவான ஆசிரியர்களை அவர்களுக்கு விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்கி நியமிப்பதற்காக ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அதற்கான அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்குமாறும் நான் ஆலோசனை வழங்கியுள்ளேன். 55 வயதிலும் 60 வயதிலும் ஓய்வு பெற்றவர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஓய்வூதியத்துடன் மேலதிக கொடுப்பனவு ஒன்றை வழங்கி 65 வரை பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். இதனால் அப்பகுதியில் உள்ள பாடசாலைகளில் வெற்றிடங்கள் நிரப்படும். சுற்று நிருபங்கள் போன்ற விதிமுறைகள் காரணமாகவே இலங்கையின் கல்வி முன்னேற்றம் தடைப்பட்டது. இதனை பற்றி நாம் கவலைப்படாமல் நடைமுறையில் எது வேண்டுமோ அதனை செய்ய வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.