அங்கவீனமடைந்த பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்த்து வைத்து அவர்களுக்கு துரிதமாக இரண்டு முறையிலான சம்பள அதிகரிப்பை வழங்க போவதாக இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார். எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.
இன்றும் முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடியது. ஊனமுற்ற பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக அரசாங்கம் செயற்பட வேண்டுமென்ற கேள்வியை எதிர்கட்சி தலைவர் முன்வைத்தார். எல்ரீரீஈ செயற்பாடுகள் காரணமாக அங்கவீனமடைந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவர்களது சம்பள உயர்வுக்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் விசேடமாக இரண்டு முறைகளில் சம்பள அதிகரிப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். அங்கவீனமடைந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு 55 வயது வரை சம்பளத்தையும் கொடுப்பனவுகளையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். அதனை தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இராணுவ வீரர்களின் ஏழு பிள்ளைகளுக்கு பாடசாலைகளில் அனுமதிகளை பெற்று கொடுத்த போதிலும் ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை ஐந்தாக வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் பா. உ பந்துல குணவர்தன தெரிவித்தார். இதற்கும் பதில் அளித்த இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன கல்வியமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதனை மீண்டும் அமுல்படுத்துவது குறித்து கலந்தாலோசிக்கப்படுமென தெரிவித்தார். சிங்கராஜ வனத்தின் குடவ பிரவேசத்தின் ஊடாக வீதியொன்றை நிர்மாணிப்பதாகவும் இதன்மூலம் சிங்கராஜ வனத்திற்கும் உயிரியல் பல்லின தன்மைக்கும் பாதிப்பு ஏற்படுவதாக பா.உ அனுர குமார திசாநாயகக் கேள்வியொன்றை முன்வைத்தார். இதற்கு பதில் அளித்த இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும 1972ம் ஆண்டு காணப்பட்டதை போன்று எவ்வித காடு அழிப்புகளும் இன்றி வீதி நிர்மாணிக்கப்படுவதாகவும் இதன் நீள மற்றும் அகலங்களில் எவ்வித அதிகரிப்பும் ஏற்படவில்லையெனவும் தெரிவித்தார்.