அண்மையில் மதுரங்குழி பகுதியில் கட்புலனற்ற இரண்டு மாணவிகள் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோள் இன்று நிறைவேற்றப்பட்டது. இரண்டு மடி கணனிகளும் நிதி அன்பளிப்பும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இம்மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. புத்தளம் மதுரங்குழி பகுதிக்கு ஜனாதிபதி விஜயம் செய்த போது கிராம சக்தி வடமேல் மாகாண நடவடிக்கை குழுக் கூட்டத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 13ம் திகதி கலந்து கொண்டார். அங்கு ஜனாதிபதியை சந்தித்த இரண்டு கட்புலனற்ற மாணவிகள் தமது கோரிக்கையை முன்வைத்தனர். அக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கட்புலனற்றோர் பயன்படுத்தும் விஷேட மென்பொருள் அடங்கிய இரண்டு மடிக்கணனிகளை ஜனாதிபதி இம்மாணவிகளுக்கு வழங்கி வைத்தார். அத்துடன் ஒரு மில்லியன் ரூபா வீதம் நிதி அன்பளிப்புக்கள் அவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்டது.
வர்ணகுலசூரிய சந்துனி பேசல, ருக்ஷானி மேபலா ஆகிய இரு மாணவிகளும் முந்தளம் சிங்கள மகா வித்தியாலயத்தில் உயர் தர கல்வியைப் பெற்று சித்தியடைந்து, கொழும்பு பல்கலைக்கழகத்தில் மானுட கலை பீடத்தில் உயர் கல்வியை தொடர்கின்றனர். இதேநேரம் சமிந்தியா தேவேந்தி கிரிமான்ன எனும் செவிப்புலனற்ற மாணவியின் எதிர்கால திறமைகளை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி ஒரு மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். 17 வயதுடைய சமிந்தியா தேவேந்தி திரிமான்ன தமது திறமைகளை நாட்டுக்கு வெளிக்காட்டும் வகையில் இம்மாதம் 20ம் 21ம் திகதிகளில் கொழும்பு ஹோட்டன் பிளேஸில் கட்புலனற்றோர் கலை பீடத்தில் நடத்திய சித்திரக் கண்காட்சியை திறந்து வைத்த ஜனாதிபதி மாணவியின் திறமைகளை பாராட்டி அவருக்கு இன்று நிதி அன்பளிப்பு வழங்கப்பட்டது.