வெனிசுவேலாவில் மீண்டும் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ தனது இரண்டாவது பதவி காலத்தினை ஜனவரி 19ம் திகதி முதல் ஆரம்பித்தது முதல் இவ்வாறு குழப்பங்கள் அங்கு ஏற்பட்டுள்ளன. கடந்த வருடம் வெனிசுவேலாவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளிநாடுகளும் தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்தன. நிக்கலஸ் மதுரோ அந்நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றமையை தொடர்ந்து மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகள் ஏற்பட்டன. இதனால் வெனிசுவேலாவின் எதிர்கட்சி தலைவர் ஜூவான் க்வைடோ அந்நாட்டின் பதில் ஜனாதிபதியாக தன்னை தானே பிரகடனப்படுத்திக்கொண்டார். இவரது பிரகடனத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும்ஏற்றுக்கொண்டுள்ளார். பிரேஸில், கொலம்பியா மற்றும் தென் அமெரிக்க நாடுகளும் ஜூவான் க்வைடோவை சட்ட ரீதியான ஜனாதிபதியாக ஏற்றுக்கொண்டுள்ளன. எதிர்கட்சிகளுடன் இணைந்து அமெரிக்கா சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருவதாக நிக்கலஸ் மதுரோ குற்றஞ்சாட்டியுள்ளார். அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவுகளை துண்டிக்க போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். வெனிசுவேலாவில் உள்ள அமெரிக்க இராஜதந்திரகள் அனைவரையும் 72 மணித்தியாலயத்திற்குள் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரோவுக்கு எதிராக வெனிசுவேலாவில் தற்போது கடும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மோதல்களின் காரணமாக இதுவரை சிலர் உயிரிழந்துள்ளனர்.