எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் புதிய அரசியல் கட்சியொன்று உருவாக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சியபத்செவன மாடிக்குடியிருப்பு தொகுதியில் இரண்டாம் கட்டமாக வீடுகளை மக்களிடம் கையளிக்கும் வைபவத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பு நகரில் குறைந்தவருமானம் பெறும் மக்கள் வசிக்கும் பின்தங்கிய பிரதேசங்களை அபிவிருத்தியடைந்த பிரதேசங்களாக மாற்றுதவற்காக நகர புனரமைப்பு திட்டத்தின் மூலம் சியப்பத்செவன வீடமைப்பு தொகுதி நிர்மாணிக்கப்பட்டது. மகா நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனையின் பெயரில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையில் இவ்வீடமைப்பு தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட ஆராமய பிளேஷில் அமைக்கப்பட்டுள்ள சியபத்செவன வீடமைப்பு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 266 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதற்காக ஆயிரத்து 64 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 15 மாடிகளை கொண்ட இக்குடியிருப்பில் 437 வீடுகள் முதற்கட்டமாக மக்களிடம் வழங்கி வைக்கப்பட்டது. இரண்டாம் கட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டன.