ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை எதுவும் கொண்டுவருவது தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சி எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லையென அக்கட்சியின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிமசிங்க பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“ரணில் விக்கிரமசிங்க அவர்களை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி முன்வந்தமைக்காக ஜனாதிபதிக்கு நாங்கள் அனைவரும் எங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். நாங்கள் நாட்டுக்காக எவ்வித பிரச்சினைகளையும் ஏற்படுத்தாமல் அவற்றை தீர்த்துவைப்போம். தனித்தீர்மானங்களை மேற்கொள்ளாமல் கலந்துரையாடி ஒற்றுமையுடனும் நல்லிணக்கதுடனும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு சிரேஷ்ட அரசியல் வாதிகள் என்ற முறையில் நாம் செயற்படவேண்டும். ஜனாதிபதியாகிய நீங்கள் முன்வைத்த கருத்துக்கள் நீங்களம் மனப்பூர்வமாக தெரிவித்த கருத்துக்களாக நான் கருதுகிறேன். அவை அனைத்தையும் நாங்கள் எமது மனதுக்குள் உள்வாங்கியுள்ளோம். நாங்கள் ஒரு விடயத்தை ஜனாதிபதியாகிய உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எமது கௌரவ பிரதமர் அவர்கள் எந்தவொரு சந்தர்பத்திலும் உங்களுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை யொன்றை கொண்டுவருவது தொடர்பில் பிரஸ்தாபிக்கவில்லை. அவ்விடயம் தொடர்பாக நாங்கள் கலந்துரையாடியுள்ளோம். அவ்வாறான ஒன்றை கொண்டுவரும் எதிர்பார்ப்பும் எம்மிடமில்லை. இதேபோன்று அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் எமது தரப்பிலிருந்தும் ஏனைய தரப்பிலிருந்தும் பல்வேறு பாரதூரமான வார்த்தைப் பிரயோகங்கள் இடம்பெற்றன. ஒரு போதும் உங்களை சிறையில் அடைக்கவோ, உங்கள் உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துவதற்கோ உங்கள் குடும்பத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தவோ, நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. நீங்கள் எமது ஜனாதிபதி என்பதனால்தான் அடிமட்டத்திலிருந்து ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கின்றீர்கள் ஆகவே எமது ஜனாதிபதியை பாதுகாப்பதற்கு நாங்கள் பாடுபடுவோம்.” என தெரிவித்தார்.