ஆபிரிக்க நாடான கொங்கோ இராச்சியத்தில் மீண்டும் இபோலா நோய் தாக்கம் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிறக்கும் குழந்தைகளுக்கு இபோலா நோய் ஏற்படலாமென ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதனால் கொங்கோவில் இபோலா நோய் சிகிச்சைக்கான நான்கு சோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சோதனை பணிகளில் ஈடுபடும் ஆய்வாளர்கள் ஏற்கனவே இபோலா நோய் தாக்கம் ஏற்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கொங்கோ சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சோதனைகளினூடாக கிடைக்கப்பெறும் தரவுகளை கொண்டு மீண்டும் இபோலா நோய் ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பு பெற தேவையான வழிமுறைகள் அடையாளம் காணப்படும். இதேவேளை அண்மைக்காலமாக கொங்கோவில் இபோலா நோய் அறிகுறிகள் இனங்காணப்பட்டதுடன், இதனால் 150க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.