நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக டெங்கு நோய் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் மேல் மாகாணங்களில் நுளம்பு குடம்பிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாக பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ப்ரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
இதனை கட்டுப்படுத்துவது தொடர்பில் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 42 ஆயிரம் பேர் டெங்கு நோய் காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாக வைத்திய நிபுணர் ப்ரசீலா சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த 15ம் மற்றும் 16ம் திகதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதனூடாக நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எனினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ப்ரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.