மூன்று கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதிகொண்ட போதைப்பொருள் தொகையொன்று கொழும்பில் கைப்பற்றப்பட்டுள்ளது. போதைப்பொளை கொண்டு சென்ற நபர் அதனை மோட்டார் வண்டியொன்றில் எடுத்துச்செல்ல முயற்சித்த சந்தர்ப்பத்தில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து சந்தேக நபர் கைதாகியுள்ளார். அவரிடமிருந்து 2 கிலோ 79 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். 33 வயதான சந்தேக நபர் கிரேன்பாஸ், பிமல்வத்த பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அவரை இன்றைய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை போதைப்பொருள் வர்த்தகத்தை தடுக்கும் வகையில் தொடர்ந்தும் விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.