நாடு அழிவுப் பாதையில் செல்வதை தடுப்பதற்காகவே புதிய அரசாங்கத்தை அமைக்கத் தாம் இணங்கியதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பந்துல குணவர்த்தன எழுதிய இலங்கை பொருளாதாரத்தின் மூன்றாண்டு வளர்ச்சியும் அதிப்தியும் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றினார். ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய மற்றும் ஆராய்ச்சி நிறுவகத்தில் இந்த நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
மேலும் தாமதித்திருந்தால் நாட்டின் சகல வளங்களும் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கும் என்று தெரிவித்த பிரதமர் நாட்டின் எதிர்காலச் சந்ததியினர் நாட்டின் உரிமையை இழப்பதற்கான அபாயம் காணப்பட்டது. இதனால் அரசியல் முரண்பாடுகள் பற்றிக் கருத்திற்கொள்ளாது நாடு எதிர்நோக்கவிருந்த அழிவை இடைநிறுத்துவதற்கான கடமையை நிறைவேற்றத் தீர்மானித்ததாகவும் பிரதமர் கூறினார். இந்தத் தீர்வு தவறானதா என்பது பற்றி மக்களின் கருத்தை அறிவது அவசியமாகும் என்றும் பிரதமர் கூறினார்.
2015ஆம்ஆண்டு முதல் பாரிய அனர்த்தம் ஆரம்பமானதாக நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தைக் கலைத்து உடனடியாக தேர்தலை நடத்துவது அவசியம் என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறினார்.