பொறுமை, அடக்கம், அறிவு, ஆன்மீகம் ஆகிய நற்பண்புகள் மனித மனங்களில் குடிகொள்ளவேண்டுமாயின், அஞ்ஞானம் எனும் இருள் அகலவேண்டுமென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்திலேயெ அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒளி தரும் தீபங்களால், தீமை எனும் இருள் அகன்று நன்மை எனும் ஒளி எழுவதை போல், அனைவரது வாழ்விலும் ஒளி எழ வேண்டுமென்பதை தீபாவளி பண்டிகை எடுத்துக்காட்டுகிறது. ஒருவருக்கொருவர் அன்பை பகிரும் கலாசார நிகழ்வினால் தீபாவளி பண்டிகை உலக மக்களை அன்பினால் இணைப்பதாகவும் ஜனாதிபதி வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இனங்களுக்கிடையிலான பகையை நீக்கி, புரிந்துணர்வையும், சகவாழ்வையும் கட்டியெழுப்புவதன் மூலம் நாடும், நாட்டு மக்களும் நன்மை பெறுவர். இதை எமது சமூகம் நன்கு உணர்ந்திருக்கும் இத்தருணத்தில் மலரும் தீபாவளி பண்டிகை மக்களுக்கிடையிலான கலாசார பந்தத்தை உறுதிப்படுத்திக்கொள்ள கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாகுமென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை இந்து மதத்தின் ஆன்மீக மதிப்பை அடிக்கோடிட்டு காட்டுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆன்மீக ரீதியில், சமூகங்களிடையே புரிந்துணர்வை வளர்ப்பதிலும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இலங்கை வாழ் இந்துக்களுக்கு தீபாவளி பண்டிகை ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமைந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். தீபாவளி பண்டிகையானது இருளை வெற்றிக்கொள்ளும், ஒளியாகவும், தீமையை வெற்றிக்கொள்ளும் நன்மையாகவும், அறியாமையை வெற்றிக்கொள்ளும் அறிவாகவும் அமையட்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.