நூற்றுக்கு இரண்டு வீதத்தால் பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் நிறைவேற்று சபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் தேசிய போக்குவரத்து சபையுடன் எதிர்வரும் புதன்கிழமை கலந்துரையாடவுள்ளதாக சம்மேளனத்தின் பிரதான செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார். சாதாரண மற்றும் சொகுசு பஸ் சேவைகள் என அனைத்து பிரிவு பஸ் கட்டணங்களும் இதில் உள்ளடங்குமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கான நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க தயார் நிலையிலுள்ளதாக அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் நிறைவேற்று சபை தெரிவித்துள்ளது. இதேவேளை பஸ் கட்டணங்களை குறைப்பது தொடர்பில் இன்றைய தினமும் விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.