பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சராக இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றார். இதுதொடர்பான நிகழ்வு நிதியமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார யுத்தத்தை வெற்றிகொள்ள நிதியமைச்சு பாரிய சேவையினை முன்னெடுக்கவேண்டியுள்ளதாக தெரிவித்தார்.
2005ம் ஆண்டு இறுதியிலிருந்து 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி வரை நீண்டகாலமாக குறித்த அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சரென்ற வகையில் நான் மிகவும் மகிழ்ச்சியுடனும் பொறுப்புடனும் செயற்பட்டுள்ளேன். இக்காலப்பகுதியில் நிதியமைச்சுக்கு சரியான ஆலோசனைகளை வழங்கி செயற்றிறன்மிக்கதாக அர்ப்பணிப்புடன் கூடிய நடவடிக்கைகளை முன்னெடுத்த அனைவரதும் சேவையை தான் பாராட்டுவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இங்கு தெரிவித்தார்.
அந்த காலப்பகுதியில் நாடு சுனாமி தாக்கத்திற்கு இலக்காகி பாரிய பொருளாதார பின்னடைவை சந்தித்திருந்தது. மக்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்திருந்தனர். இவையனைத்தையும் குறுகிய காலத்தில் நிவர்த்திசெய்வதற்கு அப்போதைய நிதியமைச்சு மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.