முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வாவிற்கு விளக்கமறியலில் விசேட பாதுகாப்பை வழங்குமாறு கோட்டை மஜிஸ்திரேட் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டார். இவரை எதிர்வரும் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இதற்கு அமைய இவருக்கு சிறைச்சாலையினால் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலளார் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஒரு சிலரை படுகொலை செய்வதற்கு சூழ்ச்சிகளை மேற்கொண்டதாக நாலக்க சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதுகுறித்து வாக்குமூலமொன்றை பெற்று கொள்வதற்காக ஐந்தாவது நாளாகவும் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்திருந்தார். இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இவர் கைது செய்யப்பட்டார். பின்னர் கோட்டை பிரதம மஜிஸ்திரேட்டின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு அவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது நாலக்க சில்வாவை எதிர்வரும் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பை வழங்குமாறும் மஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இவர் பாதுகாப்புக்கு மத்தியில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு நேற்றிரவு அழைத்துவரப்பட்டார். இதேவேளை நாலக்க சில்வாவின் நோய் நிலைமை குறித்து கவனம் செலுத்துமாறும் மஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.