முன்னாள் கடற்படை தளபதியும் பாதுகாப்பு பதவி நிலை உத்தியோகத்தருமான ரவீந்திர விஜயகுணரட்னவை கைது செய்வதற்கு போதுமான காரணங்கள் காணப்படுவதாக இரகசிய பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இவரிடம் இருந்து அடுத்த வாரத்திற்குள் வாக்குமூலம் ஒன்றை பெற்று கொள்வதாக இரகசிய பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர். 11 இளைஞர்களை கடத்திச்சென்ற சம்பவம் குறித்த வழக்கு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
இவ்வழக்கின் பிரதான சந்தேகநபரான நேவி சம்பத் எனும் முன்னாள் கடற்படை லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்பவருக்கு மறைந்திருப்பதற்கு துணை போனவர்கள் இருந்தால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மஜிஸ்திரேட் இரகசிய பொலிசாருக்கு உத்தரவிட்டார். மகேந்திர விஜயகுணரட்னவை கைது செய்வதற்கு போதுமான விடயங்கள் காணப்படுவதாக இரகசிய பொலிசார் தெரிவித்தனர். இதேவேளை சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்ற சந்தேநபருக்க வெளிநாடு செல்வதற்கு போலி ஆவணங்களை உருவாக்குவதற்காக துணை வழங்கிய குற்றச்சாட்டின் பெயரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லக்சிறி அமரசிங்க என்ற சந்தேகநபரை தொடர்ந்தும் எதிர்வரும் இரண்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.