நாடு முழுவதும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் இன்றிலிருந்து சற்று அதிகரிக்ககூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான பிரதேசங்களில் குறிப்பாக பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
சில இடங்களில் குறிப்பாக மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்தில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளின் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு திணைக்களம் பொதுமக்களுக்கு மேலும் தெரிவித்துள்ளது.