மீன்பிடித்துறை ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் நோர்வே நாட்டின் உதவியுடன் இலங்கையின் மீன்பிடிக் கைத்தொழிலை நவீனமயப்படுத்தவும், கடல் வளங்கள் மூலம் முழுமையான பயனைப் பெற்றுக்கொள்ளவும், சுற்றுலாக் கைத்தொழிலை முன்னேற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அண்மையில் நோர்வேக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டபோது இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் முன்னேற்றமடையாத பிரதேசங்களை முன்னேற்றுவதற்கு நீண்ட காலமாக நோர்வே அரசாங்கம் வழங்கும் ஒத்துழைப்பினை மதிப்பீட்டிற்கு உட்படுத்திய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்த ஒத்துழைப்பினைத் தொடர்ந்தும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டார்.
நோர்வே பிரதமர் அர்னா சோல்பர்க்குடன் (Ms. Erna Solberg) ஒஸ்லோ நகர அரச விருந்தினர்கள் மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டு ஊடக சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.
இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பின்வருமாறு குறிப்பிட்டார் .
நோர்வே நாட்டுக்கு வருகை தருமாறு நான் உட்பட இலங்கைத் தூதுக் குழுவினருக்கு அழைப்பு விடுத்தமை தொடர்பாக நோர்வே அரசுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதே காலப்பகுதியில் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றும் இங்கு வருகை தந்துள்ளது. அவர்கள் நோர்வேயின் உயர் மந்திரிகள் சபை என அழைக்கப்படும் இந்த நாட்டின் பாராளுமன்றத்தின் பணிகள் தொடர்பாக அவதானித்தனர். இது இரு நாடுகளுக்கிடையிலும் காணப்படும் நட்புறவினையும் தோழமையினையும் வெளிப்படுத்துகிறது.
நோர்வே நீண்ட காலமாக அம்பாந்தோட்டை, மொனறாகலை போன்ற கஷ்டப் பிரதேசங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவிகளை வழங்குகிறது. அது மாத்திரமன்றி யுத்த காலத்தில் அதற்கு தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கும், இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் வழங்கிய ஒத்துழைப்பினை மறந்து விட முடியாது.
உலகளாவிய புதிய அரசியல் நிலைமைகளின் மத்தியில் இரு சிறிய நாடுகள் என்ற வகையில் நோர்வேயும் இலங்கையும் ஒன்றிணைந்து பணியாற்றி, அது தொடர்பாக ஒருங்கிணைப்பினை ஏற்படுத்த நாம் எதிர்பார்க்கிறோம்.
பல்லினத்தவர் ஒன்றிணைந்து ஆரம்பித்த அரசியல் பொருளாதார இணக்கப்பாடுகள் மற்றும் முறைமைகளைப் பாதுகாத்து முன்னோக்கிச் செல்வதற்கு இரு நாடுகளும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தைப் பாதுகாக்க வேண்டும்.
மேலும் கடல் வளங்களைப் பாதுகாப்பது தொடர்பாக நாம் கவனஞ் செலுத்த வேண்டியுள்ளது. இந்து சமுத்திரத்தில் அமைதி, பாதுகாப்பு, சுதந்திரமான கப்பற் போக்குவரத்து என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு நாம் நோர்வேயின் உதவியைக் கோரியுள்ளோம். சமுத்திர வளங்களை நாம் நோக்க வேண்டும். அந்தாட்டிக்கா போன்ற பிரதேசங்கள் தொடர்பாக கவனஞ் செலுத்த வேண்டும். இந்து சமுத்திரத்துடன் வாழும் நாம் அது தொடர்பாக கவனஞ் செலுத்தாவிடின் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட முடியும்.
அதேபோன்று இந்து சமுத்திரத்தில் கப்பற் போக்குவரத்து தொடர்பாகவும், அவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், அரசியல்ரீதியான சுதந்திரத்தைப் பாதுகாத்தல், நாம் ஏற்படுத்திக் கொள்ளும் கூட்டமைப்பு தொடர்பாகவும் நாம் நோர்வே நாட்டிற்கு அறிவித்துள்ளோம்.
நோர்வே என்பது மீன்பிடி ஏற்றுமதித் துறையில் முன்னணி வகிக்கும் ஒரு நாடு எனக் கூற வேண்டும். அதனால் சமுத்திரத்தின் முழுமையான வளங்களைப் பெற்றுக் கொள்ளவும், நோர்வே நிறுவனங்களுடன் கலந்துரையாடி முதலீடுகளைப் பெற்றுக் கொள்ளவும் எதிர்பார்க்கிறோம். இது தொடர்பாக எமது நாட்டு முதலீட்டாளர்கள் குழுவொன்றும், மீன்பிடித்துறை அமைச்சரும் இங்கு வருகை தந்து பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றனர். இது தொடர்பான அறிவினைப் பெற்றுக்கொள்ள நோர்வே நிறுவனங்களுடன் நாம் கலந்துரையாடல்களை மேற்கொள்கிறோம். அதேபோன்று சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பாகவும் கவனஞ் செலுத்தப்பட்டுள்ளது எனக்கூற வேண்டும்.
இலங்iகியிலிருந்து வந்து தற்போது நோர்வேயில் வசிப்போர் இலங்கைக்கும், நோர்வே நாட்டுக்கும் ஆற்றும் சேவையை நாம் பாராட்ட வேண்டும். இதற்கமைய நோர்வே நாட்டுடன் ஒன்றிணைந்து எமது நாட்டின் முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்ல நாம் எதிர்பார்க்கிறோம் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.
இலங்கை மற்றும் நோர்வே ஆகிய நாடுகளுக்கிடையே பழங்காலந் தொட்டு காணப்பட்ட தொடர்புகள் தற்போது பலமடைந்துள்ளதாக நோர்வே பிரதமர் அர்னா சோல்பர்க் (Ms. Erna Solberg)இந்த கூட்டு ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
இலங்கை இலக்காகக் கொண்டுள்ள நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு நோர்வே உயர்ந்தபட்ச ஒத்துழைப்பினை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும், நோர்வேயிடம் காணப்படும் புத்தாக்க அறிவு மற்றும் தொழிநுட்பத்தைப் பரிமாறிக் கொள்வதற்குத் தயாராக இருப்பதாகவும் சோல்பர்க் குறிப்பிட்டார்.