நோர்வே நாட்டின் உதவியுடன் ரொபோ தொழில்நுட்ப களஞ்சியமொன்று டிசம்பர் மாதம் நிர்மாணிக்கப்படவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நோர்வே விஜயத்தின் பலனாக இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று பிற்பகல் ஒஸ்லோ நகரை சென்றடைந்தார். ஒஸ்லோ நகரிலுள்ள எக்ஸ் எக்ஸ் எல் களஞ்சிய கட்டிடத்தை பிரதமர் பார்வையிட்டார். இக்கட்டிடம் ரொபோ தொழில்நுட்பத்தின் மூலம் இயங்குகின்றது. ஹெலிமென்ட் லொஜிக்ஸ் மற்றும் டிக்ரி தொழில்நுட்ப கம்பனிகளின் ரொபோ தொழில்நுட்ப திட்டத்தின் மூலம் இக்களஞ்சியசாலை இயங்குகின்றது. இதன் மூலம் மிகவும் துரிதமாகவும் கிரமமாகவும் களஞ்சியப்படுத்தும் பணிகள் இடம்பெறுகின்றன. இதன் மூலம் பொருட்களை பொதி செய்து மீண்டும் கப்பலில் ஏற்றலாம். ஆடைகள் , மீன்கள், மரக்கறி, பழ வகைகள் போன்றவற்றை களஞ்சியப்படுத்தவும் அதனை பொதி செய்யவும் இத்திட்டத்தினால் முடியும். குறித்த கம்பனியுடன் இணைந்து இது போன்ற களஞ்சியசாலையொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் தற்போது ஆரம்ப கட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா தெரிவித்தார். பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, ஹேசா விதானகே உட்பட இலங்கை பிரதிநிதிகள் பலரும் இவ்விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.