இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாட்டில் குறிப்பாக வடமத்திய மத்திய சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் காணப்படும் மழையுடனான வானிலை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் (ஒக்டோபர் 1 முதல் 3 வரை) தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில்
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது மாலையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய, ஊவா சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும் கரையோரப் பிரதேசங்களில் பல இடங்களில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.