இராணுவத்தினரின் அபிமானத்தை பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இராணுவத்தினருக்கு உயர்ந்தபட்ச வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நியூயோர்க் நகரில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நிகழ்கால இலங்கையில் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்றரை வருடங்களுக்குள் கண்ணுக்கு புலப்படாத வெற்றிகள் பல எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
எல்.ரி.ரி.ஈ யினருக்கு எதிராக போராடியதாக எந்தவொரு இராணுவ வீரர் மீதும் குற்றம் சுமத்தப்படவில்லை. அவர்களுக்கான பதவி உயர்வுகள் உட்பட எந்தவொரு வரப்பிரசாதமும் முடக்கப்படவில்லை.
எனினும் யுத்தத்தின் போதும், யுத்தத்தின் பின்னரும் பல்வேறு கொலைகள் இடம்பெற்றன. இவ்வாறான யுத்தத்துடன் தொடர்புபடாத குற்றச்செயல்கள் பிரச்சினைக்குரியவையாகும். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டமை, கீத் நொயார் தாக்கப்பட்டமை, றகர் வீரர் வசீம் தாஜுதீன் கொல்லப்பட்டமை, ஊடக நிறுவனங்கள் மீது தீ மூட்டப்பட்டமை போன்ற பிரச்சினைகள் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முக்கியத்துவம் பெற்றிருந்தன.
இவ்வாறான குற்றச்செயல்களுடன் இராணுவத்தினர் தொடர்புபட்டிருந்தால் பாரிய குற்றமாகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தொழில்வாண்மையாளர்கள், வர்த்தகர்கள், பல்கலைக்கழக மாணவர்களும் சந்திப்பில் கலந்துகொண்டனர். இதேவேளை தாய்நாட்டை பாதுகாத்து ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துள்ள பணிகளை மக்கள் பாராட்டியுள்ளனர்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் எண்டோனியோ குட்டெரெஸை இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.