அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் ஈரானுக்கு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவோ அல்லது அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கோ பாதிப்பை ஏற்படுத்தினால் அதற்கு உரிய நட்ட ஈட்டை செலுத்த வேண்டுமென அவர் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஐ.நா. 73 வது பொதுச் சபை அமர்வில் உரையாற்றும் போது ஈரானின் செயல்பாடுகளுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் பிரச்சினைகளையும் அழிவினையும் ஏற்படுத்துவதற்கு ஈரான் பாடுபடுவதாக டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சுமத்தியுள்ளார். இதற்கு பதிலளித்த ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானியும் ஜனாதிபதி டிரம்பின் ஆட்சியை குற்றஞ்சாட்டியுள்ளார். இதனை தொடர்ந்தே அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஈரானுடன் ஏற்படுத்தப்பட்ட அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதுடன் டிரம்ப்பின் நிருவாகம் ஈரானுக்கு எதிராக புதிய தடைகளை விதித்தது. இதனை தொடர்ந்து ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டது.