ரஷ்யாவுடனான இராணுவ ஒத்துழைப்பில் தலையிட அமெரிக்காவுக்கு உரிமை இல்லையென சீனா தெரிவித்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து, சீனா அதிநவீன போர் விமானங்களையும், வான்பாதுகாப்பு ஏவுகணை கட்டமைப்புக்களையும் கொள்வனவு செய்துள்ளது. குறித்த செயற்பாட்டையடுத்து அமெரிக்கா, சீனா மீது பொருளாதார தடை விதித்தது. ஏற்கனவே சீனாவுக்கும், அமெரிக்காவுக்குமிடையில் வர்த்தக போர் மூண்டுள்ள நிலையில், குறித்த செயற்பாடு சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்தமையானது இறையாண்மை கொண்ட இரு நாடுகளுக்கிடையிலான வழக்கமான செயலாகுமென சீனா தெரிவித்துள்ளது. இதில் தலையிட அமெரிக்காவுக்கு எவ்வித உரிமையும் இல்லையென சீன இராணுவ செய்தி தொடர்பாளர் வூ கியான் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் செயற்பாடானது சர்வதேச உறவுகளின் அடிப்படை விதிமுறை மீறல் என அவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.