நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய உணவு பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை மாகம்புற ருஹூனு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் விவசாயிகளுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
தூர்ந்து போன வயல் நிலங்களில் விவசாயத்தை மேற்கொள்ளும் தேசிய வேலைத்திட்டம் தொடர்பாக விவசாயிகளை அறிவுறுத்துவதற்காக முன்னெடுககப்பட்ட தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஜின் நில்வளா திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனாதிபதி அத்திட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பாக தற்போதைய அரசாங்கம் மீண்டும் விசாரணைகளை ஆரம்பிக்கும் என தெரிவித்தார்.
இலங்கையில் உற்பத்திசெய்யகூடிய பொருட்களை ஒருசிலரின் தேவைக்கு ஏற்ப நுகர்வோரின் தேவையென்ற போர்வையில் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும். இதனால் இந்த தூர்ந்துபோன வயல் நிலங்களில் விவசாயத்தை மேற்கொள்வதற்கான திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பு அவசியம். ஜின் நில்வளா பற்றி பேசினார்கள். விவசாயிகள் மகஜர் ஒன்றையும் சமர்ப்பித்தார்கள். கடந்த ஆட்சியின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தெரியும். அது தொடர்பில் விசாரணைகளும் இடம்பெறுகின்றன. இந்த அரசாங்கத்தினாலும் அதுபற்றி பிரத்தியேக விசாரணை நடத்த வேண்டியேற்படும். இதன் தாமதம் என்னவென கண்டறிய வேண்டும். இதற்கு பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் தமது அரசியல் பெறுமதியை பாதுகாத்து ஜின் நில்வளா அமைச்சரவை பத்திரமும் 3 மாதங்கள் தாமதமாகின்றன. அதுபற்றியும் எனக்கு தெரியும். அடுத்த கட்ட விடயங்களை நாட்டுக்கு அம்பலப்படுத்த முன்னர் அதனை நிறைவேற்றுமாறு நான் அவர்களை பகிரங்கமாக கூறுகிறேன். ஹம்பாந்தோட்டை மாத்தறை மாவட்டங்களுக்கு கூடிய சேவையை புரியகூடிய அபிவிருத்தியில் மாற்றங்களை ஏற்படுத்த இத்திட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என இங்கு தெரிவித்தார்.
விவசாயிகளின் பிரச்சினைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி அமைச்சரவை பத்திரம் ஒன்றையும் சமர்ப்பித்து எமது கவனத்தை ஈர்க்க செய்தார். சகல தூர்ந்த வயல்களிலும் விவசாயம் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்தார். எமது வயல்களில் ஒரு இலட்சத்து 48 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான வயல்கள் 2016ஆம் ஆண்டின் கணிப்பீட்டின் படி தூர்ந்து போன வயல்களாக காணப்படுகின்றது. எமது சட்டத்திற்கு ஏற்ப சகல வயல்களிலும் விவசாயத்தை மேற்கொள்ள தவறினால் அதில் ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் ஏனையோரை இதில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளோம். எந்தவொரு வயல் உரிமையாளரும் அதனை எதிர்க்க நினைத்தால் ஜனாதிபதியின் ஆசிர்வாதத்தில் சட்டத்திட்டங்களுக்கு அமைய அக்காணிகளை பொறுப்பேற்று விவசாயத்தை மேற்கொள்வோம் என அமைச்சர் மஹிந்த அமரவீர இங்கு தெரிவித்தார்.
மக்கள் பிரதிநிதிகள் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இதேநேரம் அம்பலாந்தோட்டை பிரதேச செயலகத்தின் புதிய மூன்று மாடி கட்டடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டடத்திற்கென 990 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. காணி உறுதிகளும் வழங்கப்பட்டன.
ஊனமுற்றவர்களுக்கு உபகரணங்களும் பாடசாலை மாணவர்களுக்கு புலமை பரிசில்களும்
இம்மாவட்டத்தில் 576 கிராம உத்தியோக்கத்தர் பிரிவுகள் உண்டு. அலுவலகங்கள் இல்லாத நிலையில் 20 அலுவலகங்களை ஏற்படுத்தினோம். நான்கு பேர் ஒரே அலுவலகத்தில் அமர்ந்தி;ருக்க வேண்டிய நிலை காணப்பட்டது. 2015 ஜனவரி எட்டாம் திகதி ஜனாதிபதியாக நியமனம் பெற்ற பின்னர் முழு நாட்டிலும் இதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.யாழ்ப்பாணத்திலும் உண்டு, ஹம்பாந்தோட்டையிலும் தெய்வேந்திர முனையிலும் உண்டு. நாடு முழுவதிலும் சுமார் 180 பிரதேச செயலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அரச அதிகாரிகள் மக்களுக்கு உரிய சேவையாற்றுவதையே ஜனாதிபதியும் பிரதமரும் அரசாங்கமும் எதிர்பார்க்கின்றது என அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.