நீர்ப்பாசன துறையில் மற்றுமொரு மாபெரும் வேலைத்திட்டமான 3 வது பாரிய நீர்த்தேக்கமான யான்ஓயாவின் நிர்மாண பணிகள் இவ்வாண்டில் நிறைவு செய்யப்படுமென அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்வாண்டு இறுதிக்குய் யான் ஓயா வேலைத்திட்டத்தை பூர்த்தி செய்ய முடியுமென நம்புகின்றோம். அணைக்கட்டின் நிர்மாண பணிகளும் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன. இதற்கிணைவாக புதிதாக 4 கிராமங்கள் உருவாக்கப்படும். இவை சகல வசதிகளையும் கொண்ட கிராமங்களாகவே மக்களிடம் கையளிக்கப்படும். பாடசாலை, ஆரம்ப பாடசாலை, சனசமூக நிலையம், கிராம சேவகர் அலுவலகம், உட்கட்டமைப்பு வசதிகள், நீர் வழங்கல் நடவடிக்கைகள் இவ்வாறு சகல வசதிகளையும் ஏற்படுத்தி இந்த கிராமங்களில் மக்களை நாம் குடியமர்த்துவோம். தற்போது காணி மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை பூர்த்தியானதன்பின்னர் நஷ்டஈடு வழங்கவுள்ளோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
நீர்ப்பாசன துறையில் மற்றுமொரு மைல்கல்லாக 3 வது மாபெரும் நீர்த்தேக்கமான யான் ஓயா நீர்த்தேக்கத்தின் நிர்மாண பணிகள் ;இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. வடமத்திய, கிழக்கு உட்பட ஏனைய பகுதிகளின் நீர்த்தேவையை பூர்த்தி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். ஹொரவுபத்தான, யக்கினிகந்த, கோமரன்கடவெல, வெஹரபெதிமலை ஆகியவற்றை ஊடறுத்து 4 பகுதிகளாக நீர்த்தேக்கத்தின் நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் பிரதான கால்வாய் 2 கிலோ மீட்டர் தூரமுடையதாகும். யானு ஓயா நீர்த்தேக்கத்தின் நிர்மாண பணிகள் நிறைவடையும் அதேவேளை உட்கட்டமைப்பு அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.