பகடிவதை தடுப்பது தொடர்பான சட்டமூலத்தை உரியமுறையில் நடைமுறைப்படுத்தி இதனுடன் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கு தேவையான சட்டங்களை முன்னெடுக்கப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை தொழில் பயிலுனர் அதிகாரசபையின் நிர்மாணிக்க உத்தேசித்துள்ள பொலன்னறுவை தேசிய தொழிற்பயிலுனர் நிறுவனத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
புதிய தொழிநுட்ப வசதியுடன் கூடிய பொலன்னறுவை தொழில் பயிலுனர் அதிகார சபையை ஹிங்குரங்கொட மெதிரிகிரிய வீதியிலுள்ள தொறதெக்க பிரதேசத்தில் இந்நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது. 17 ஏக்கர் நிலம் இதற்கென பயன்படுத்தப்படவுள்ளது. இதற்காக 6 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. நெதர்லாந்து அரசாங்கம் இதற்கான கடனை வழங்குகிறது. இந்த புதிய தொழில் பயிலுனர் நிறுவனத்தின் ஊடாக தேசிய தொழில் பயிலுனர் தகுதியுடைய NVQ 4 மற்றும் 5 வது மட்டத்தின் 1325 தொழிநுட்பவியலாளர்கள் மற்றும் டிப்ளோமா தாரிகளை வருடாந்தம் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக தொழில் வாய்ப்பில் ஈடுபட்டுள்ள தொழில் பயிலுனர்களுக்காகவும் இந்நிலயத்தின் ஊடாக பாடநெறிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும் நிர்மாணத்துறை, மோட்;டார் தொழிநுட்பம், சுற்றுலா, விவசாயம் ஆகிய துறைகளில் பயிற்சிகளை வழங்;குவதற்காக 5 பயிற்சி நிலையங்கள் இங்கு ஆரம்பிக்கப்படவுள்ளன. 3 வருட காலப்பகுதிக்குள் நிர்மாண நடவடிக்கைகளை நிறைவு செய்து 2022 ஜனவரிமாத முதல் இந்நிலையத்தில் பயிற்சி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இங்கு நிர்மாணப்பணிகளை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி இந்நிலையத்தை பார்வையிட்டார். தொழில்பயிற்சி தொடர்பான இணையத்தளமும் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பகடிவதை தொடர்பில் ஜனாதிபதி இங்கு கருத்து தெரிவித்தார்.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/KwXsy4FhF8Y”]
ஜனாதிபதி கருத்து வெளியிடுகையில் :”கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்கலைக்கழகத்திற்கு தேர்வுசெய்யப்பட்டு பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகம் செல்லாத மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 500 ஐ தாண்டுகிறது. கடந்த 25 ஆண்டுகளில் பகிடிவதையால் 25 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். நூறாயிரக்கணக்குகளில் காயங்களும், கால்காய்களும் உடைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டிலும் பாலியல் துன்புறுத்தல்கள் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. பெற்றோர்கள் எத்தனையோ கனவுகளோடு இருப்பார்கள். இங்குள்ள உயர்தர மாணவர்கள் தங்களுடைய முழு எதிர்காலமும் பல்கலைக்கழகத்திலேயே தங்கியுள்ளதென நினைத்துக்கொண்டிருப்பார்கள். அதுசரியானதுதான் ஆனால் இந்த மிலேச்சல் தனமான அரசியல் வன்முறைக்கு மாணவர்களை பலிகொடுக்கப்படுகிறார்கள். இவர்கள்தான் அடுத்ததாக நாட்டை பொறுப்பேற்கவுள்ளவர்கள். நாட்டை பொறுப்பேற்கவுள்ள இவர்களின் எதிர்காலத்தை யார் சீரழிப்பது. வேறு யாருமல்ல அரசியல் குழுக்கள் தான். இன்றைய சுற்றுச்சூழல் அவ்வாறுதான் உள்ளது. மாணவர்களை பாழாக்க நாம் இடமளிக்கமாட்டோம். நாட்டில் சட்டமுள்ளது, பகிடிவதைக்கு எதிரான கடுமையான சட்டத்தை மறைந்த அமைச்சர் ரிச்சட் பத்தரன ஏற்கனவே கொண்டுவந்துள்ளார். பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார். இதுவரையில் அந்த சட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. பொலிசாரும் அந்த சட்ட மூலத்தின் கீழ் வழக்குகளை பதிவு செய்யாமல் இருந்தார்கள். ஆனாலும் தற்போது அச்சட்டத்தின் கீழ் வழக்குத்தாக்கல் செய்யுமாறு கூறியுள்ளோம். பிணை வழங்கப்படமாட்டாது. சிறைதான் செல்லவேண்டிவரும் ஆனாலும் வேறு வழியில்லை. “
ஜனாதிபதி மேலும் இங்கு கருத்து வெளியிடுகையில் தொழில்பயிலுனர் துறையிலுள்ள பாரம்பரிய முறைகளை மாற்றி புதிய உலகம் மற்றும் நவீன தொழிநுட்பத்தோடு இணைந்து பயணிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதி கருத்து வெளியிடுகையில் : “எமது நாட்டில் உற்பத்தி துறை, தொழிநுட்ப துறை, கைத்தொழில் துறை, ஆகியவை பற்றிய சிறந்த அறிவுள்ள புலமையுள்ளவர்கள் தேவைப்படுகிறார்கள். அவ்வாறு அமைகிறபோது பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும். ஒவ்வொரு துறைசார்ந்தும் தேர்ச்சிபெற்றவர்கள் உருவாக்கப்படும்போது அவர்கள் பலநாடுகளுக்கும் சென்று பணிபுரிய முடியும். இதன்மூலம் எமது அந்நியசெலவணியை அதிகரித்துக்கொள்ள முடியும். தொழில்பயிலுனர் கற்கையின் அவசியத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும். சகலரும் பல்கலைக்கழகம் சென்று கலைத்துறையில் பட்டம் பெற்று நடுவீதிக்குவந்து பாததைகளை ஏந்திக்கொண்டு அரசாங்கத்தையும் அரசியல்வாதிகளையும் திட்டிக்கொண்டு அரசியல்வாதிகளுக்கு பின்னால் செல்லும் கல்விமுறைமையை நாம் மாற்ற வேண்டும். அதற்கு இருக்கின்ற சிறந்த வழியே இதுவாகும்.”
இதேவேளை பொலன்னறுவை பாராக்கிரம சமுத்திர வேலைத்திட்;டத்தின் டி 1 வடக்கு கால்வாய்க்கு உரித்தான பழைய தீபெட்டி பாலத்தின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதியினால் இன்று முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டன. பராக்கிரம சமுத்திரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான நிலங்களுக்கு நீரை கொண்டுசெல்லும் பிரதான கால்வாயான வடக்கு கால்வாய் பிரதானமாக நீரைப் பாய்ச்சும் மையமாக அமைந்துள்ளது. இதில் தீப்பெட்டி பாலம் முக்கியத்தும் பெறுகின்றது. இப்பாலம் அண்மையில் சேதமடைந்ததனால்; இம்முறை போகத்தில் விவசாயிகள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தனர். 15 ஆயிரம் ஏக்கர் வயல் நிலத்திற்கு தேவையான நீரை விநியோகிக்க முடியாமல் போனது. வடிகாலமைப்பு அதிகாரிகள் துரிதமாக செயற்பட்டு உடைந்த பாலத்தை நிர்மாணித்து தேவையான நீரை விநியோகிக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்பின்னர் ஜனாதிபதியும் இதை கண்காணித்தார். பின்னர் புதிய பாலத்தை துரிதமாக நிர்மாணிக்குமாறும் அவர் ஆலோசனை வழங்கினார். இந்த வேலைத்தி;ட்டங்கள் இன்று ஆரம்பமாகின. இதற்கென 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பதற்கான நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்துவைத்ததன் பின்னர் அபிவிருத்தி பணிகள் இடம்பெறும் இடத்தையும் பார்வையிட்டார். இத்தீப்பெட்டி பாலத்திற்கு சமாந்திரமாக மீள்எழுச்சி பெறும் பொலன்னறுவை திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் மாற்று பாலத்தையும் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட மக்களோடு அவர் சுமூகமாக கலந்துரையாடினார்.