மகாவெலி கங்கையின் கிளை ஆறான பெரியாறு கழிமுகத்தின் அருகில் சேற்றில் சிக்கியுள்ள 7 யானைகளை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுவதுடன் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும மீட்பு பணிகளை பார்வையிட்டுள்ளார்.
கடந்த 4 நாட்களுக்கு முன்னர் குறித்த யானை கூட்டம் இப்பகுதியிலுள்ள சேற்றில் இறங்கிய போது அதில் சிக்கியது. குறித்த பகுதியானது சோமாவதி தேசிய வனப்பூங்காவிலிருந்து யானைகள் நடமாடும் பிரதான வழித்தடமாகும். இப்பகுதியில் ஒரு வகையான நீர்த்தாவரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இவற்றின் மீது நடந்து சென்ற போதே இவ்யானைக்கூட்டம் சேற்றில் சிக்கியது. இதனை அவதானித்த அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் மீட்பு பணிகளை ஆரம்பித்தனர். இராணுவத்தின் பங்களிப்புடன் இம்மீட்பு பணிகள் இடம்பெறுகின்றன. 5 யானைகள் இச்சேற்றிலிருந்து மீட்கப்பட்டதுடன் 2 யானைகளின் சடலங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சற்று தொலைவிலிருந்து மீட்கப்பட்டன.