காசா எல்லையில், இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 240 பலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர். அதில் சிறுவர்கள் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பலஸ்தீன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலுக்கு எதிராக காசா எல்லையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் எல்லைப்பகுதியிலிருந்து, இஸ்ரேல் இராணுவம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இஸ்ரேல் இராணுவம் பதில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இதன்போதே 240 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 1948ம் ஆண்டு 7 இலட்சத்து 50 ஆயிரம் பலஸ்தீனியர்களை நாட்டை விட்டு வெளியேற்ற இஸ்ரேல் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. அவர்களது உரிமைகளை மீள கோரியே ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பஸ்தீனியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் 30ம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்களில் இடம்பெற்ற மோதல்களினால் இதுவரை 166 பேர் பலியாகியுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.