ரயில் விபத்து தொடர்பாக நால்வர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்த ரயிலின் சாரதி, உதவியாளர், பிரதான கட்டுப்பாட்டாளர் மற்றும் உப கட்டுப்பாட்டாளர் ஆகியோரே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை பொல்கஹவெல பனலிய பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. விபத்துக்கான காரணத்தை கண்டறிதல் மற்றும் இவ்வாறானதொரு சம்பவம் மீண்டும் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் யோசனைகளை பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமென ரயில் பிரதி பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.
இந்நிலையில் ரயில் மார்க்கத்தை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனால் ரயில்சேவை தாமதமடையுமென ரயில் கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த கடுகதி ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கொழும்பிலிருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்த ரயிலின் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் 32 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் பொல்கஹவெல, குருநாகல், ரபுக்கன மற்றும் கேகாலை வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விபத்தில் 6 ரயில் பெட்டிகள் சேதமடைந்துள்ளதோடு ஒரு ரயில் என்ஜின் சேதமாகியுள்ளது. விபத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.