மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் மூலமே தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியுமென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். விகாரை, கோவில், பள்ளிவாசல், தேவாலயம் உள்ளிட்ட மதஸ்தலங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் எதிர்காலத்தை பலப்படுத்தி, பண்பாடு மிக்க சமூகமொன்றை கட்டியெழுப்ப முடியுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எழுச்சிப்பெறும் பொலன்னறுவை திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட சிரிபெரகும் பிரிவெனாவின் இருமாடி கட்டடத்தை திறந்துவைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். கிராமிய பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் பெருமளவு நிதியை ஒதுக்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். கடந்த காலங்களில் பல ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டபோதிலும், பொலன்னறுவைக்காக நிறைவேற்றப்படவேண்டிய பல பணிகள் காணப்பட்டன. முன்னுரிமை வழங்கப்படவேண்டிய அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. சில தலைவர்கள் பொலன்னறுவையை புறக்கணித்தனர். அரசாங்கம் ஜனநாயகத்தையும், ஊடக சுதந்திரத்தையும் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளது. மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். கிராம சக்தி மற்றும் கம்பெரலிய வேலைத்திட்டங்களினூடாக கிராமப்புர அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எண்டர்ப்ரைசஸ் ஸ்ரீ லங்கா திட்டம் தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. அடுத்த வருடமளவில் நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம், பொருளாதாரம் போன்றவை உயர்வடையுமென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்தார்.
எழுச்சிப்பெறும் பொலன்னறுவை திட்டத்தினூடாக 180 திட்டங்கள் மக்கள் உரிமைக்காக வழங்கப்படவுள்ளன. கடந்த இரு நாட்களில் 120 திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் எஞ்சியுள்ள 60 திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.