நவீன தொழில்நுட்ப அபிவிருத்தியுடன் நாட்டில் பாரிய அபிவிருத்தி புரட்சியொனறு ஏற்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கையடக்க தொலைபேசி உட்பட தொழில்நுட்ப கருவிகளில் நாட்டின் வரலாறு தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். போபிட்டிய ஸ்ரீ சுதர்ஷனாராம விகாரையில் இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து கண்டி வரை மத்திய அதிவேக பாதையை நாங்கள் அமைத்து வருகின்றோம். தற்போது இப்பாதைக்கான 2 ஆம் கட்ட பணிகள் இடம்பெறுகின்றன. முதல் கட்டமாக கொழும்பிலிருந்து மீரிகமைக்கு இப்பாதை அமைக்கப்படவுள்ளது. 3 ஆம் கட்ட பாதை பொத்துஹரவிலிருந்து கலகெதர வரை அமைக்கப்படும். கலகெதரயிலிருந்து கட்டுகஸ்தொட்டவிற்கு 4 ஆம் கட்ட பாதை அமைக்கப்படும். இதற்கான பேச்சுவார்த்தையை நாங்கள் இந்திய அரசாங்கத்துடன் மேற்கொண்டு வருகின்றோம். இப்பாதை அமைக்கப்பட்டவுடன் கொழும்புடனான தொடர்புகள் அபிவிருத்தியடையும். தற்போது கண்டிக்கு செல்ல 5 மணித்தியாலங்கள் செல்கின்றன. 4 மணித்தியாலங்களில் ஹம்பாந்தோட்டைக்கு செல்லும் வகையில் நாங்கள் பாதையை அமைப்போம். இதேவேளை நாங்கள் வடமேல் மாகாணத்தில் தொழில்பேட்டையொன்றை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன் மூலம் இப்பகுதியில் துரித மாற்றம் ஏற்படும். அந்த அபிவிருத்தியின் போது, ஆன்மிக துறையை பாதுகாப்பது உங்களது பொறுப்பென நாங்கள் கருதுகின்றோம். 21 ஆம் நூற்றாண்டு என்பது தற்போது உள்ளதை விட ஒரு மாற்றமான யுகமாகும். எமது கையடக்க தொலைபேசியை நோக்கினால் உலகம் எந்தளவு மாற்றமடைந்துள்ளதென்பதை அவதானிக்கலாம். அத்துடன் உலகில் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்களையும் கையடக்க தொலைபேசி மூலம் அறிந்து கொள்ளலாம். ஒரு சில நாடுகள் தமது நாட்டின் வரலாற்றை கையடக்க தொலைபேசிகளில் பதிவு செய்துள்ளன. துரதிஷ்டவசமாக எமது ஊடகங்களில் அவ்வாறான மாற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை. பிபிசி செய்தி சேவையில் இங்கிலாந்து மற்றும் பெரிய பிரிதத்தானியாவின் வரலாற்றை அடிக்கடி குறிப்பிடுவதை அவதானிக்கலாம். அரசாங்கம் இதற்கு உதவுவது போலவே ஊடகங்களும் இதற்கு பங்களிப்பு வழங்க வேண்டும். புதிய செயல்த்திட்டங்களை நாங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றோம். அபிவிருத்தி திட்டங்கள் பற்றிய தகவல்களை எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் நாங்கள் அறிவிப்போம். அங்கிருந்துதான் எமது வரலாற்றை முன்னெடுத்துச் செல்வதற்கான புதிய திட்டங்கள் ஆரம்பமாகும். அது எங்களது மட்டுமல்லாமல் நாட்டு மக்கள் அனைவரினதும் கடமையாகும் என குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் அமைச்சர்களான அகில விராஜ் காரியசம், காமினி ஜயவிக்ரம பெரேரா, ராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவல, பிரதி அமைச்சர் நளின் பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் துசார இந்துனில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.