ஏ – 9 வீதியின் புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த மேலும் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சியிலிருந்து, வவுனியா நோக்கி பயணித்த பஸ் ஒன்றும், வவுனியாவிலிருந்து, கிளிநொச்சி நோக்கி பயணித்த கனரக வாகனமொன்றும் ஒன்றோடு, ஒன்று நேரே மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.
அதிக வேகத்தில் வந்த கனரக வாகனத்தின் வேகத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் போனமையே விபத்துக்கு காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா – புளியங்குளம் 198வது கட்டை பகுதியிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் ஒருசிலரே குறித்த பஸ்ஸில் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.