வெளிநாட்டை சேர்ந்த குடும்பம் ஒன்று பயணம் செய்த வேன் ஒன்று அதிவேக பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஒன்றில் மோதியதில் அக்குடும்பத்தின் தாய் மற்றும் 4 வயது குழந்தையொன்று உயிரிழந்தனர். இதில் காயமடைந்த பெண்ணின் கணவர், புதல்வர் மற்றும் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். தெற்கு அதிவேக பாதையின் குருந்துகஹஹெத்தப்ம பகுதியில் இன்று அதிகாலை இவ்விபத்து இடம்பெற்றது. கொள்கலன் வண்டியின் சக்கரத்தை அதன் சாரதி மாற்றிக் கொண்டிருந்த போது பின்னால் வந்த வேன் அதில் மோதியுள்ளது. அதில் பயணித்த அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். கொள்கலன் சாரதியின் 2 பாதங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெற்றோர் தனது 2 குழந்தைகளுடன் தங்காலை நோக்கி சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. வேனின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே இவவிபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தம்புள்ளை குருநாகல் பிரதான வீதியின் கலேவல பகுதியில் இன்று அதிகாலை விபத்தொன்று இடம்பெற்றது. கொள்கலன் வாகனம் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலுள்ள கார் ஒன்றையும் வர்த்தக நிலையம் ஒன்றையும் மோதியுள்ளது. காரின் உரிமையாளர் தனது காரை நிறுத்தி விட்டு ஹோட்டலுக்கு சென்ற போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.