சிறைதண்டனை பெற்றுள்ள கலகொட அத்தே ஞானசாரதேரரை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு பிற்போடப்பட்டுள்ளது. எதிர்வரும் 22ம் திகதி பிற்பகல் 2 மணி வரை குறித்த மனுமீதான விசாரணை பிற்போடப்படுவதாக ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று காலை குறித்த மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் எவரும் நீதிமன்றில் ஆஜராகவில்லை. இதனால் மனு பிற்போடப்பட்டது.
இதேவேளை ஞானசாரதேரரை விடுதலை செய்யுமாறு கோரி பிக்குகள் குழுவொன்று முன்னெடுத்த நடைபயணம் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெறுகின்றது. காலியிலுள்ள விகாரைகளின் தேரர்களால் இந்த நடைபயணம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் காலி நகரிலிருந்து நடைபயணம் ஆரம்பமானது. இதனை கொழும்பு வரை தொடரவுள்ளதாக தேரர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று காலை 09.30 மணியளவில் சீனிகம தேவாலயத்திலிருந்து நடைபயணம் ஆரம்பமானது. இது அழுத்கம வரை இது தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.